Thursday, September 25, 2008

இளைஞர்களிடம் சீர்கேடு, சமூகத்துக்குப் பெருங்கேடு !

"இளமைப் பருவம் என்பது சவர்க்காரம் தடவப்பட்ட கண்ணாடிப் பாத்திரத்தைக் கையில் பிடித்துக் கொண்டு வழுக்கலான பாறையில் நடப்பதற்கு ஒப்பாகும்" என்று அறிஞர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். இதில் இளமைப் பருவம் என்பதைப் பாத்திரமாக நினைத்துக் கொள்ள வேண்டும்; சவர்க்காரம், வழுக்கலான பாறை ஆகியவற்றைச் சுற்றுச் சூழல்கள் எனக் கருத வேண்டும். கண்ணாடிப் பாத்திரத்தை ஏந்திச் செல்பவர்கள் பதின்ம வயது இளைஞர்கள். தப்பித் தவறிச் சந்தர்ப்பச் சூழ்நிலை என்கிற வழுக்கல் பாறையில் வழுக்கி விழுந்து விட்டால், சவர்க்காரம் தடவிய பாத்திரத்தைச் சரியாகவும் அழுத்தமாகவும் கட்டொழுங்குடனும் பிடித்திருக்கத் தவறிவிட்டால் அவர்களின் இளமைப்பருவம் என்கிற கண்ணாடிப் பாத்திரம் கீழே விழுந்து உடைந்துவிடும். பிறகு, கண்ணாடிப் பாத்திரத்தை ஒட்ட வைக்க முடியாது என்பது போல, இளமைப் பருவத்தில் மனத்தில் படிந்த அழுக்குகளை நீக்குவது சாத்தியமாகாது.

இந்திய இளைஞர்கள் சமூகச் சீர்கேடுகளிலும் தீய வழிகளிலும் ஈடுபடுவதாகவும், இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் அபாயகரமான வழிகளில் செல்வதாகவும் இவை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

பள்ளியில் வெளிப் புறத்தில் உந்துருளி (மோட்டார் சைக்கிள்) களை வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுடன் பள்ளி முடிந்ததும் மாணவிகள் அவர்களின் உந்துருளிகளில் ஏறிச் செல்கிர்றார்கள் என்று நாமே எத்தனை முறை நேரடியாகப் பாரித்துள்ளோம் . இதைக் கேட்டாலே ஈரக்குலை நடுங்குகிறது, நெஞ்சு பதறுகிறது.

எதிர்காலத் தலைவர்கள் இப்படி உருவானால், இந்தியர்களின் முன்னேற்றம் கருவிலேயே கருகிப் போய்விடுமே என்கிற கவலைதான் அதிகரிக்கிறது.

இளைஞர்கள்தாம் ஏதோ இளமை வேகத்தில் அப்படிச் செய்கிறார்கள் என்றால் இந்த மாணவிகளுக்கு என்ன வந்தது? முள் சேலைமீது பட்டாலும், சேலை முள்மீது பட்டாலும் சேதம் முள்ளுக்கு அல்ல, சேலைக்குத்தான். அது போல, தவறான முறையில் ஆண் பெண்ணுடன் சேர்ந்தாலும் பெண் ஆணுடன் சேர்ந்தாலும் அதன் முழுப்பாதிப்பும் பெண்ணுக்குத்தான் என்பது தெரிந்தும் மாணவிகள் இப்படிச் செய்வது ஏன்?

இதுமட்டுமா, கழுத்தை அறுத்துக் கொலை செய்வது உட்பட மிகவும் கொடூரமான குற்றங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதும் நாளுக்குநாள் கூடுகிறதே தவிர குறைந்த பாடில்லை.

இந்திய இளைஞர்களிடையே இத்தகைய பண்பாட்டுக்கு முரணான பழக்க வழக்கங்களும், மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட குற்றச் செயல்களும் பெருகுவதற்குரிய காரண காரியங்கள் என்ன என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

என்னும் குறளின் கருத்துக்கேற்ப அனைத்து இந்திய அமைப்புகள் ஒருங்கிணைந்த செயல்பாட்டை மேற்கொண்டால்தான், இந்திய இளைஞர்களின் சீர்கேட்டைத் தவிர்க்க முடியும்.

நோய் என்னவென்று முதலில் கண்டு பிடிக்க வேண்டும். அதற்கான காரணத்தை அடுத்து அறிந்தபின், அதைத் தணிப்பதற்கான வழியை ஆராய்ந்து அந்த வழியையும் இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்யும் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

வள்ளுவர் காட்டியுள்ள இந்த வழி உடல் நோய்க்கு மட்டுமல்ல; மன நோய்க்கும் பொருந்தும். இதனைப் பின்பற்றி இளைஞர்களிடம் இருக்கும் சீர்கேட்டை அழிக்க முயன்றால்தான் வெற்றி கிடைக்கும்.


நன்றி: சில தலுவலோடு மலேசிய நண்பன்.